யார் அந்த சார்? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அளித்த பதில்
புலன் விசாரணையில் வேறு யாராவது குற்றவாளி இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்
யார் அந்த சார்? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அளித்த பதில்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3வது நாளான இன்று, அண்ணா பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விவாதம் நடைபெற்றது.
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் இந்த விவாதத்தின் மீது பேசினர். அதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "இதுகுறித்து உண்மையான அக்கறையோடு பல உறுப்பினர்கள் பேசினர். இதை பயன்படுத்தி இந்த ஆட்சியின் மீது தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கத்தோடும் சில உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள்.
யாருக்கு என்ன நோக்கம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் நின்று அவருக்கு சட்டப்படி நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும், என்பதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. குற்றம் நடந்தபிறகு, ஒருவேளை குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமல் விட்டிருந்தால், அல்லது குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தாலோ, அரசை நீங்கள் குறை சொல்லலாம்.
ஆனால் சில மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்த பிறகும், குற்றம் தொடர்புடைய ஆதாரங்களை எல்லாம் திரட்டிய பிறகும், அரசை குறை சொல்வது அரசியல் ஆதாயத்துக்கானதே தவிர, உண்மையான அக்கறையோடு செயல்படுவது இல்லை.
முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்துக்கொண்டு 'யார் அந்த சார்?' என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுதான் இப்போது இந்த புகாரை விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த புலன் விசாரணையில் வேறு யாராவது குற்றவாளி இருப்பதாக தெரியவந்தால், அது யாராக இருந்தாலும் சரி, மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் மீது தயவு தாட்சணியமின்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதை நூறு சதவீதம் உறுதியோடு கூறுகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நான் எதிர்க்கட்சிகளை கேட்க விரும்புவது, யார் அந்த சார்? குற்றம்சாட்டுகிறீர்களே, உண்மையாகவே அதற்கு உங்களிடம் ஆதாரம் இருந்தால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் கூறுங்கள்.
அதை யார் தடுக்கப்போகிறார்கள். அதைவிடுத்து ஒரு மாணவி சம்பந்தப்பட்ட சென்சிட்டிவான வழக்கில், வீண் விளம்பரம், குறுகிய அரசியல் லாபத்துக்காக மலிவான செயலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம். இந்த அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.
இந்த ஒரு சம்பவத்தை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாதது போன்ற ஒரு சதி திட்டத்தை உருவாக்க பலர் முயற்சிக்கின்றனர். இது மக்கள் மத்தியில் நிச்சயமாக எடுபடாது.
காரணம், பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும்.