5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்! செக் வைத்த அமலாக்கத்துறை!

Apr 25, 2024 - 18:09
 5
5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்! செக் வைத்த அமலாக்கத்துறை!

மணல் கொள்ளை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட, கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக வும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.  இதில், மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, 10 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார். இதற்கிடையே 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படாத, சாட்சியாக சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடியாது எனவும், மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் முறையிட்டார். இதனை விசரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தோடு, அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக வேண்டும் எனவும், உத்தரவிட்டது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.