5-வது இடத்தில் அக்சர் பட்டேலை களம் இறக்கியது ஏன்? – கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

ஏதேனும் சொல்ல விரும்பினால் கொஞ்சமும் தயங்காமல் சொல்லுங்கள்

Feb 7, 2025 - 18:04
 3
5-வது இடத்தில் அக்சர் பட்டேலை களம் இறக்கியது ஏன்? – கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

5-வது இடத்தில் அக்சர் பட்டேலை களம் இறக்கியது ஏன்? – கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 47.4 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 52, ஜேக்கப் பெத்தேல் 51, பில்சால்ட் 43 ரன் எடுத்தனர். இந்திய பவுலிங்கில் ஜடே ஜா, ஹர்சித் ரானா தலா 3 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 15, ரோகித்சர்மா 2 ரன்னில் வெளியேற ஸ்ரேயாஸ் அய்யர் 59, சுப்மன்கில் 87, அக்சர்பட்டேல் 52 ரன் விளாசினர். 38.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 251 ரன் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சுப்மன்கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில் “நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நாள் தொடருக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. மீண்டும் விரைவாக ஒருங்கிணைந்து என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள விரும்பினோம். இங்கிலாந்து தொடக்க வீரர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் மீண்டும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது சற்று நீளமான வடிவம் என்பதால் எங்களுக்கு திரும்பி வர நேரமுள்ளது. எங்கள் பேட்டிங் வரிசையில் 5வது இடத்தில் அக்சர் பட்டேல் இறங்கியதற்கு காரணம் நடுவில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை இருந்தது. ஏனென்றால் இடது கை வீரருக்கு பந்துவீசப் போகும் 2 சுழற் பந்துவீச்சாளர்கள் அவர்களிடத்தில் உள்ளனர் என்பது எங்களுக்கு தெரியும். கடந்த 2 வருடங்களாகவே அக்சர் பட்டேல் ஒரு மேம்பட்ட பேட்ஸ்மேன் ஆக இருந்து வருகிறார். இன்று அது தெளிவாக தெரிந்தது. எங்களுக்கு ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டதில் அக்சர் மற்றும் கில் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்தனர்” என்றார். ஆட்டநாயகன் கில் கூறுகையில், “19 ரன்னுக்கு 2 விக்கெட் என தடுமாறிய போது களத்தில் நின்று ஆட முயற்சித்தேன். பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் உதவியது.

அது போன்ற சூழ்நிலையில் பின்னங்காலில் அதிகமாக செல்லாமல் நல்ல ஷாட்டுகளை அடிப்பதே ஐடியாவாக இருந்தது. ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடியது எனக்கு உதவியது. 70 ரன்களில் இருந்த போது நான் அடித்த ஃபுல் ஷாட் மிகவும் பிடித்தது. துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் எனது பேட்டிங் பெரிதாக மாறவில்லை. ஆனால் களத்தில் போட்டியைப் பற்றிய சிந்தனைகளை தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன். அதே போல ரோகித் என்ன நினைக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். போட்டியை பற்றி ஏதேனும் சொல்ல விரும்பினால் கொஞ்சமும் தயங்காமல் சொல்லுங்கள் என்று அவர் என்னிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.

அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறுகையில், “வெற்றி பெற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. பவர்பிளேவில் அருமையான தொடக்கத்தை பெற்றோம். ஆனால் எதிர்பாராத நேரத்தில் 4 விக்கெட் தொடர்ச்சியாக இழந்தது வெறுப்பூட்டுவதாக அமைந்தது. இன்னும் 40-50 ரன் எடுத்திருந்தால் உதவிகரமாக அமைந்திருக்கும். இந்தியா 20 ரன்களுக்குள் 2 விக்கெட் இழந்த பிறகு அந்தக் கூட்டணியை உருவாக்கிய பெருமை நிச்சயம் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கில்லுக்குதான் சேரும். அடுத்த போட்டியில் இந்தத் தோல்வியை மறந்து சிறப்பாக செயல்படுவோம், என்றார். 2வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.