15வது துணை ஜனாதிபதி – பிரதமர் மோடி வாழ்த்து
மக்கள் சேவையை திறம்பட செய்ய வாழ்த்துகிறேன்

15வது துணை ஜனாதிபதி – பிரதமர் மோடி வாழ்த்து
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக இன்று தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். இவருக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். துணை ஜனாதிபதி தேர்தலில், 452 ஓட்டுகளை பெற்று, 'இண்டி' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை வீழ்த்திய அவர், டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.
இதனையடுத்து, பிரதமர் மோடி, சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தேசத்தை கட்டமைப்பதிலும், சமூக சேவை மற்றும் ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்துவதில் தனது வாழ்க்கையை சி.பி.ராதாகிருஷ்ணன் அர்ப்பணித்துள்ளார். அவரது துணை ஜனாதிபதி பதவி காலத்தில் மக்கள் சேவையை திறம்பட செய்ய வாழ்த்துகிறேன், என மோடி குறிப்பிட்டுள்ளார்.