பிரதமர் மற்றும் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி…., ஆனால், ஆவின் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு!
தள்ளுபடி என்ற பெயரில் ஆவின் நிறுவனம் ஏமாற்று

பிரதமர் மற்றும் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி…., ஆனால், ஆவின் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு!
ஜிஎஸ்டி குறைப்பை தொடர்ந்து பால் பொருட்கள் விற்பனை விலையை தனியார் பால் நிறுவனங்கள் குறைத்துள்ள நிலையில், விற்பனை விலையை குறைக்காமல் தள்ளுபடி என்ற பெயரில் ஆவின் நிறுவனம் ஏமாற்றுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் UHT பால் மற்றும் பன்னீர் வகைகளுக்கு ஜிஎஸ்டியில் 5% இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 12%லிருந்து 5% ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளுக்கு 18%லிருந்து 5% ஆகவும் ஜிஎஸ்டியை குறைப்பதென்றும் மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினோ ஜிஎஸ்டி வரி குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்காமல் "நெய் சந்தை நிலைமை மற்றும் விற்பனையை கருத்தில் கொண்டு, நெய் வாடிக்கையாளர்களுக்கு 22.09.2025 முதல் 30.11.2025 வரை தள்ளுபடி" கொடுப்பது போல் தெரிவித்திருப்பதும், வெண்ணெய், சீஸ், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் விற்பனை விலையை குறைக்காமல், நெய், பன்னீர், UHT பால் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை மட்டும் சலுகை விலையில் வழங்குவது போல அதற்கான விலைப்பட்டியலை கடிதம் மூலம் ஆவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலை கணிசமாக குறைந்திடவும் இதனால் பொதுமக்கள் பெரிதும் பலனடைவார்கள் என்பதாலும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு காரணமாக இருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்." என கூறியுள்ளார்.