நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்!

“பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்ததாக 13 பேர் கைதாகியுள்ளனர்.இதனால் இத்தேர்வின் தன்மை குறித்தே சந்தேகம் எழுகிறது. கிட்டத்தட்ட 24 லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதிய மாணவர்களின் எதிர்காலம் என்ன?,” என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். “எனவே முறைகேடு நடந்த இடங்களில் மறுதேர்வு நடத்துமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். கனவுகளுடன் இருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் எந்த பாரபட்சமும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கடந்த 5 ஆம் தேதி 571 நகரங்களில் 4 ஆயிரத்து 751 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். நீட் தேர்வுக்கு முந்தைய நாள் நீட் வினாத்தாள் வெளியான சம்பவத்தில் பீகாரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் நீட் தேர்வு குறித்த கவலை மாணவர்களிடையே எழுந்துள்ளது.
ஆனால் நீட் வினாத்தாள் மோசடியில் கைது செய்யப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. நீட் தேர்வில் நிலவும் சமத்துவமின்மை, சமூகப்பாகுபாடு போன்ற காரணங்களால், 26-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யும் வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பபேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும், குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை.
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை ஆரம்பித்து 85 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளை பெற்றுள்ளார். மாணவர்கள் தங்கள் மருத்துவ கனவை தொடர்வதற்கும் மற்றும் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும் நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு” என குறிப்பிட்டுள்ளார்.