காதல் திருமணம் செய்து மோசடி….கணவன் குடும்பத்தார் செய்த கொடுமை!

Jul 27, 2024 - 22:33
 10
காதல் திருமணம் செய்து மோசடி….கணவன் குடும்பத்தார் செய்த கொடுமை!

பட்டியலின பெண் என்பதால் கணவரின் குடும்பத்தார் கொடுமை படுத்தியாக புகார். இதனால் நகை சான்றிதழ்களை இழந்த பெண்.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த பெண் கயல்விழி (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).  இவருக்கும் வானகரம் பகுதியைச் சேர்ந்த ஹரி பிரசாத் (32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ஹரி பிரசாத் குடும்பத்தினர் கயல்விழியிடமிருந்து 15 சவரன் நகையை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி அவர் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் சமூகத்தின் பெயரைச் சொல்லி தொடர்ந்து கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஒரு கட்டத்தில் கணவர் அது குடும்பத்தினர் அனைவரும் கயல்விழியை வாடகை வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். செய்வதறியாது திகைத்த கயல்விழி காவல்துறையில் புகார் செய்துள்ளார்

இந்த தகவலை அறிந்த ஹரி பிரசாத் மனைவி கயல்விழியிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துள்ளார். அதன் பின்னர் இருவரும் வாடகை வீடு எடுத்து தங்கி உள்ளனர். ஆனால் சில நாட்களிலேயே கயல்விழியிடமிருந்து ரூபாய் 10,000 பணம் மற்றும் அவரது கல்வி சான்றிதழில் எடுத்துக் கொண்டு ஹரிப்பிரசாத் தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கயல்விழி கடந்த மே மாதம் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த காவல்துறையினர், ஹரி பிரசாத் செல்போன் என்னை வைத்து அவரது இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

அதன்படி மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை இன்று போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது, கணவன் மற்றும் கணவரின் உறவினர்களில் மனைவியை கொடுமைப்படுத்துதல், நம்ப வைத்து மோசடி செய்தல், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்,

தகவல் தொழில்நுட்ப மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவரிடம் இருந்து தனது 15 சவரன் நகையையும், கல்யாணத்திற்காக தான் செலவு செய்த  4 லட்சம் ரூபாயையும் மற்றும் தனது கல்விச் சான்றிதழ்களையும் பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.