50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் காமராஜரின் பெருமையை மூடி மறைத்துவிட்டன – சீமான்

கர்மவீரர் காமராசரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் குறிப்பிடத்தக்க அடையாளங்கள் ஏதும் இதுவரை நிறுவப்படவில்லை

Mar 6, 2025 - 16:35
 2
50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் காமராஜரின் பெருமையை மூடி மறைத்துவிட்டன – சீமான்

50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் காமராஜரின் பெருமையை மூடி மறைத்துவிட்டன – சீமான்

திருத்தணி நகரில் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில் இதற்கு கருணாநிதி நூற்றாண்டு சந்தை என பெயர் மாற்றம் செய்யவிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கப்படும் மதுக்கடைகளைத் தவிர, மற்ற அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதே வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்த அடையாளங்கள் எல்லாம் பத்தாதென்று, தமிழ்ப்பெருந்தலைவர்களுக்குத் தமிழகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ள அடையாளச் சின்னங்களையும் அழித்தொழிக்கும் வகையில், ஏற்கனவே இருந்த தலைவர்களின் பெயரை மாற்றி, பராமரிப்பு என்ற பெயரில் கருணாநிதி பெயரில் திறப்பது எந்த வகையில் நியாயமாகும், இதற்கு பெயர் தான் திராவிட மாடலா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 தமிழகத்தில் 9 ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகள் செய்து, பொற்கால ஆட்சி தந்த பெருந்தலைவர் காமராஜருக்கு இணையான இன்னொரு முதல்வர் இன்று வரை யாரும் வரவில்லையென மக்கள் போற்றிப் புகழ்கின்றனர்.

அந்த அளவிற்கு மிகச் சிறப்பான ஆட்சியைத் தந்த கர்மவீரர் காமராசரின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் குறிப்பிடத்தக்க அடையாளங்கள் ஏதும் இதுவரை நிறுவப்படவில்லை என்பது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும்.

குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளாகத் திராவிட கட்சிகள் பெருந்தலைவரின் புகழை மூடி மறைத்து இருட்டடிப்புச் செய்து வருகின்றன என்பது வேதனைக்குரிய ஒன்றாகும் என குற்றம்சாட்டியுள்ளார்.