மருத்துவர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற விதிமுறையில் இருந்து விலக்கு தரக் கோரி ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ஸ்ரீனிவாசன் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மருத்துவர்கள் விதிமீறலில் ஈடுபடவில்லை; பணி நிமித்தமாக அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். மேலும், ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது; மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று அரசு தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து, இந்த மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மே 22-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.